Skip to main content

சீட்டு மாளிகை – நைலான் கயிறு


சுஜாதாவின் முதல் தொடர்கதை நைலான் கயிறு. குமுதம் 1968, ஆகஸ்ட் மாதம் 141ம் பக்கத்தில் வெளிவந்தது. இதற்கு சுஜாதா வைத்த பெயர் - சீட்டு மாளிகை. ரா.கி.ரங்கராஜன் அதில் முதல் அத்தியாயத்திலிருந்து 'நைலான் கயிறு' என்பதைத் தேர்ந்தெடுத்தார். ( நைலான் கயிறு தொடர்கதையின் கடைசி அத்தியாயம் - சீட்டு மாளிகை). 14 வாரம் தொடர்கதையாக வந்தது.

Uவாய் வளைந்து, **** என்று பூப்போட்ட சட்டை, ________ இந்த கோட்டின் அகலத்துக்கு மீசை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் சுநந்தாவின் டைரி என்று பல புதுமைகள் முதல் அத்தியாயத்திலேயே அடங்கும். "யாருப்பா இது?" என்று தமிழ் வாசகர்களை சட்டென்று நிமிர்த்திப் பேசவைத்தது.

இரண்டு தலைமுறையினரைப் பாதித்து, இன்றும் நைலான் கயிறு பற்றி அவரைப் பார்ப்பவர்கள் கேட்பதற்கு இது தான் காரணம்.   தமிழ் நடையில் ஒரு புது முயற்சி இந்தத் தொடர்கதையில் துவங்கியது என்று சொல்லாலாம். ( இந்த தொடர்கதை கன்னடத்திலும், மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது, ஒரு படக்கதையாக கூட மாற்றப்பட்டது, திரைப்படமாக்கப்படுவதிலிருந்து தப்பித்தது.)

இந்தக் கதையை சுஜாதா அவர்கள் எழுதும் போது நான் பிறக்கவில்லை.

நான் காலேஜ் படிக்கும் போது, தென்னூர் பஸ்டாண்டில் பஸ்ஸுக்காகக் காத்திருந்த போது, ரோடில் பழைய புத்தகங்களைப் பரப்பி விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். எல்லாம் அழுக்குப் படிந்த பழுப்பு நிறப் புத்தகங்கள்.

அந்தப் புத்தகக் குவியலில் ஒரு பழைய குமுதம் இதழ் தணித்து தெரிந்தது. தெரிந்ததற்குக் காரணம் பெருமாள் படம் இல்லை, கவர்ச்சிப் படம் ( அல்லது குமுதம் அட்டை படம் ) என்ன என்று கையில் எடுத்து உள்ளே பார்த்தேன். கொஞ்சம் ஏமாற்றம் ஆனால் ஆச்சரியம். ஏமாற்றத்துக்குக் காரணம், கவர்ச்சி உள்ளே தொடரவில்லை. ஆச்சரியத்துக்கு காரணம் - சுஜாதா எழுதிய நைலான் கயிறு குமுதம் இதழிலிருந்து யாரோ அழகாக சேகரித்து தைத்த புத்தகம் அது!

"என்ன தம்பி புத்தகம் வேணுமா ?"

"எவ்வளவு?"

"காமிங்க" என்று என்னிடமிருந்த புத்தகத்தை வாங்கி. 'முற்றும்" வரை இருக்கு தம்பி "இரண்டு ரூபாய்" தாங்க என்றார்.

"நான் 10 ரூபாய் கொடுத்து அதை வாங்கி வந்தேன்.

40 வருடம் கழித்து, இன்றும் பல தொகுப்புகளாக நைலான் கயிறு வந்துவிட்டது. ராணி முத்து, சத்தியா பாக்கேட் நாவல், குமரி பதிப்பகம், விசா பதிப்பகம்(எட்டாவது பதிப்பு) என்று, ஆனால் யாருமே அதைச் சரியாகப் பதிப்பதில்லை. சிலர் முதல் அத்தியாயத்தில் சில பாராவை முழுங்கி விடுவார்கள். DTP இல்லாத அந்தக் காலத்தில் செய்த புதுமைகளை, DTP உள்ள இந்தக் காலத்தில் அதை எடிட் செய்துவிடுவார்கள்.

இன்று அவர் பிறந்த நாளை முன்னிட்டு முதல் தொடர்கதையிலிருந்து சில பகுதிகள், படங்கள்.




Comments