Skip to main content

சீனி கம்

'சக்கரை இனிக்கிற சக்கரை' என்ற  பதிவை எழுதி சரியாக ஒரு வருடம் ஆகிறது. டயாபடீஸ் வந்த ஒரு வருடத்தில் நல்லது என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், நான் நடந்திருக்கிறேன், தினமும் காலையில் 45 நிமிஷம். நான் போகும் வழியில் ஒரே செடியில் ஊதா, மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். இது என்ன வகைச் செடி, யாருக்காவது தெரியுமா ? செண்பகப்பூ மரங்கள் நிறைய இருக்கின்றன. எந்தப் பூவையும் இது வரை பறித்ததில்லை (கைக்கு எட்டுவதில்லை ). மற்றபடி, டயாபடீஸ் என்றால் என்ன என்று நிறைய தெரிந்துகொண்டேன்.



கொஞ்சம் சுயபுராணம் - டயாபடீஸ் வந்த மூன்று மாதத்திற்கு நல்ல கண்ட்ரோலில் இருந்தது. பிறகு 2007 ஆரம்பத்தில் ரத்தப் பரிசோதனையில் சர்க்கரை அளவு கூடியிருந்தது. டாக்டர் ஒரு கடுகு சைஸ் மாத்திரையை ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதன் விளைவு எனக்கு ஒரு நாள் கார் ஓட்டும் போது தெரிந்தது. அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது, கை கால் எல்லாம் வெடவெடத்தது, வியர்த்தது. டயாபடீஸ் பற்றி படித்திருந்ததால் இது கம்மியான சர்க்கரை அளவு (Hypoglycemia) என்று பட்சி சொன்னது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு, பக்கத்தில் உள்ள பழக்கடையில் கால் கிலோ திராட்சைப் பழத்தை வாங்கி சப்பிட்ட பின் ஸ்பினாச் சாப்பிட்ட பாப்பாய் போல் ஆனேன்.


டாக்டரிடம் கேட்டதற்கு கடுகு சைஸ் மாத்திரையை பாதியாக எடுத்துக் கொள்ளச் சொன்னார். திரும்பவும் சில பரிசோதனைகளில் சர்க்கரை அளவு சென்சக்ஸ் போல ஏறும், இறங்கும்; ஏன் என்று தெரியவில்லை. ஆனால் டாக்டர் தொடர்ந்து மாத்திரையை எடுத்துக் கொள்ளச் சொன்னார். சில சமயம் அந்த வெடவெடப்பு இருக்கும்; சாக்லேட் சாப்பிட்டால் சரியாகிவிடும். மாத்திரை செய்யும் ஜாலம் என்று உள் மனம் சொன்னது. !
 டாக்டரிடம் இந்த மாத்திரையில் ஏதோ பிரச்சனை என்று சொன்னதற்கு, அவர் தொடர்ந்து அதே மாத்திரையையே சாப்பிடச் சொன்னார்.


போன மாதம், மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் ஒரு டெஸ்ட் கொடுத்தேன். அதில் சர்க்கரை அளவு நார்மலாக இருந்தது. பிறகு ஒரு வாரம் கழித்து மாத்திரை எடுத்துக்கொண்டு டெஸ்ட் எடுத்தேன், சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. இந்த முறை டாக்டரை மாற்றிவிட்டேன்.


இரண்டு வகை மாத்திரைகள் உண்டு. டால்பிடமைடு, பிகுவனைடு, டயநில், க்ளைநேஸ் போன்றவை முதல் வகையும் ஃபென்ஃபர்மின் மெட்ஃபார்மின் போன்றவை இரண்டாவது வகையும் ஆகும். முதல் வகை, பாதிக்கப்பட்ட இன்சுலின் சுரப்புக்குப் புத்துயிர் கொடுக்கும். இன்சுலின் வாங்கிகளை அதிகரிக்கும். இரண்டாவது வகை, உடலில் சர்க்கரை பயன்பாட்டைக் குறைக்கும். இருக்கிற சர்க்கரையை அதிகம் பயன்படுத்த உதவும்.  பசியைக் குறைக்கும். இப்போது,  இரண்டாவது வகை மாத்திரையினால் எல்லாம் நார்மலாக இருக்கிறது. நார்மலாக இருந்தாலும், வீட்டுக்கு வருபவர்கள் டிப்ஸ் கொடுப்பதை மட்டும் நிறுத்துவதில்லை.


மருந்துகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்வது நலம். நண்பர் சொன்னர் இந்த மருந்து நல்லது என்று எடுத்துக்கொண்டால் ரொம்ப ரிஸ்க்.


"வெள்ளரிக்காய், தக்காளி, பாகற்காய் எல்லாம் கலந்து எம்டி ஸ்டமக்கில் ஒரு கப் ஜூஸ் குடிங்க.


"பூசணிக்காய் சாப்பிட்டால் நல்லது என்று சில மாதம் முன் பேப்பரில் படித்தேன்" ( வெள்ளை பூசணிக்காயா ? அல்லது ஹாலோவின் பூசணியா ?)


"அருகம் புல் ஜூஸ் குடிங்க, பிள்ளையார் கூட அது தான் சாப்பிடுகிறார்".


"அரிசிக்குப் பதிலா சப்பாத்தி ட்ரை பண்ணுங்க".


"வெந்தயம் சாப்பிடுங்க சார், நல்ல எஃபெக்ட் இருக்கும்"


வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிவிடும் என்று பெரும்பாலோர் நம்புகின்றனர், வெந்தயத்தில் உள்ள 'டரைகோ நெலின்' என்னும் வேதிப்பொருளுக்கு சர்க்கரை அளவைக் குறைக்கும் சக்தி ஓரளவு உண்டு. வெந்தயத்திலுள்ள நார்ச் சத்து உணவிலுள்ள சர்க்கரை இரத்தத்தில் கலப்பதைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கான மாத்திரை ஒன்று சப்பிட்டால், இரத்தச் சக்கரை எந்த அளவு குறையும!
  அதே அளவுக்கு குறைய வேண்டுமானால் 4, 5 கிலோ வெந்தயம் சாப்பிட வேண்டும். வெந்தயம் வாங்கி ஏழையாய்ப் போக விருப்பமில்லை.  ஆனால் காலையில் கொஞ்சம் சாப்பிட்டால் வயிற்றுக்கு நல்லது.
 
காபி, டீக்கு சர்க்கரை சேர்க்காமல், இனிப்பு வகைகளை சாப்பிடாமல் இருந்தாலும், நாம் சாப்பிடும் உணவின் மூலம் உடம்பில் சர்க்கரை சேர்ந்துவிடுகிறது. அப்படியா என்று கேட்பவர்களுக்கு இந்த விளக்கம்..


நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. அது ரத்தத்தில் கலக்கும் போது, குளூக்கோஸாக மாற்றப் படுகிறது. இந்த குளூக்கோஸ் நம் உடம்புக்குப் பயன்படக் கூடிய சக்தியாக மாற வேண்டுமெனில் அதற்கு இன்சுலின் வேண்டும். இரத்தத்தில் வருகிற குளூக்கோஸின் அளவும் அதை சக்தியாக மாற்றிப் பயன்படுத்தத் தேவையான இந்த இன்சுலின் அளவும் சரியான விகிதத்தில் இருக்கும் வரை டிவியில் படம் பார்த்துக் கொண்டு, சினிமா கிசுகிசுக்களை படித்துக்கொண்டு இருக்கலாம். இல்லை என்றால், அதிக குளுக்கோஸ் உள்ளே வரும்போதோ உடம்பில் இன்சுலின் அளவு குறைவாக இருந்தாலோ சக்தியாக மாற்றப்பட்டாத குளூக்கோஸ் சிறுநீரகத்துக்குச் செல்கிறது, பிரச்சனை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது!.


அதற்கு முன் ஒரு சின்ன ஃபிளாஷ் பாக் -


'ஜே ஜில் க்ரைஸ்ட்' என்பவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? முதன் முதலில் சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவர். ஒருமுறை 'உச்சா' போய்க் கொண்டிருந்தவர், அப்போது அங்கே போய்கொண்டிருந்த எறும்புகள் எல்லாம் அபவுட் டர்ன் செய்து இவரின் சிறுநீரை மொய்க்க தொடங்கியதைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனார். அதே நினைவாக இருந்தவர், தூக்கத்திலிருந்து எழுந்து திரும்பவும் சிறுநீர் கழித்தார், இந்த முறை டம்பளரில் பிடித்துக் குடித்துப் பார்த்தார். நன்னாரி சர்பத் போல் இருந்தது. சிறுநீர் வழியாக குளூக்கோஸ் வெளியேறுகிறதென்று கண்டுபிடித்தார். இது கண்டுபிடிக்கபட்டது 1800களில்.
 
ஆக,  குளூக்கோஸ் சிறுநீரகத்துக்கு செல்லும் போது, சிறுநீரகம் குளூக்கோஸை வடிகட்டும் எக்ஸ்ட்ரா வேலை செய்யத் தொடங்குகிறது. நாளடைவில் சிறுநீரகம் 'அட போப்பா'  எனக்குக் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டாமா என்று வேலை எதுவும் செய்யாமல் எல்லாவற்றையும் வெளியேற்றுகிறது. இதில் நம் உடலுக்குத் தேவையான தண்ணீர், தாதுக்கள் எல்லாம் வெளியேறுகிறது. டயாபடிஸ் என்பதற்கு அதிகம் சிறுநீர் வெளியேறுதல் என்று அர்த்தம். இதனால் தான் இதை நீரழிவு என்றும் சொல்கிறார்கள். ஆக சிறுநீர் நன்றாக போய்க்கொண்டே இருந்தாலும் அது சிறுநீரகப் பாதிப்பு தான். ஆனால் மழைகாலங்களில், ஏஸி அரையில், பரிட்சை நேரத்தில், மனைவி டோஸ் விடும் போது உச்சா போவது எல்லாம் ஹார்மோனைத் தூண்டி சிறுநீரைச் சுரக்க செய்வன.


அரிசிச் சாதத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட் தான் சப்பாத்தியிலும் இருக்கிறது. ஆனால் சப்பாத்தியில் நார்ச் சத்து இருக்கிறது. எதைச் சாப்பிடுகிறீர்கள் என்பதை விட எவ்வளவு, எப்படிச் சாப்பிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம். கேழ்வரகு, கம்பு கஞ்சியாகக் குடிக்காமல், அதை தோசை போல சாப்பிட வேண்டும். அதாவது உடனே இவை ஜீரணம் ஆக கூடாது, மெதுவாக நமக்கு எனர்ஜியைக் கொடுக்க வேண்டும்.!


 சர்க்கரை வியாதி உள்ளர்கள் சிறுநீர்ப் பரிசோதனையின் போது குளுக்கோஸ் இல்லை என்றால் சந்தோஷப்படாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டு வேலைகள், படியில் ஏறி இறங்குவது போன்ற சின்னச் சின்ன வேலைகள் செய்து, அளவாகச் சாப்பிட்டால் நல்லது. அப்பா, கடைசியா மெசேஜ் சொல்லிவிட்டேன்!


( கட்டுரையின் சில பகுதிகள்(கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்) உச்சி முதல் உள்ளங்கால் வரை என்ற புத்தகத்தில் இருக்கிறது )

Comments