Skip to main content

சென்னை விசிட்

இந்த வாரம் மருத்துவ பரிசோதனைக்கு, சென்னை செல்ல வேண்டியிருந்தது. அப்படியே வலைப்பதிவு பட்டறைக்கும் சென்றேன்.


1993-1994ம் வருடம் கணினியில் தமிழில் தெரிந்தாலே புல்லரிக்கும். ஸ்ரீநிவாசன் 'ஆதாவின்' என்ற மென்பொருளின் தயவால்,  டாஸ் கணினியில் பாரதியார் கவிதைகள், திருக்குறள் எல்லாம் பெரிது பெரிதாகத் தெரியும்.  பிறகு விண்டோஸ் வந்த சமயம் தமிழ் நெட்டில் தங்கலீஷ் மறைந்து, முரசு அஞ்சல் வந்தது. அந்தச் சமயத்தில் தான் தமிழ் நெட்(99 என்று நினைக்கிறேன்) கருத்தரங்குக்குச் செல்ல வாய்ப்பும் கிடைத்தது. வேடிக்கை பார்க்கத்தான்.



பெரிய ஆட்கள் எல்லாம் என்கோடிங், கீபோர்ட் லேயவுட் என்று கார சாரமாக விவாதிப்பார்கள்.  வயது வந்த பிறகு தான் அந்த அரசியல் புரிய ஆரம்பித்தது.  TAM, TAB, TSCII எல்லாம் இன்றும் இருப்பதற்கு காரணம் இதுவே.


அந்தச் சமயத்தில் நானும் ஒரு ஃபாண்ட் (சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் என்கோடிங்) உருவாக்கியிருந்தால் இன்று 114 என்கோடிங்குடன் என்னுடைய என்கோடிங்கும் சேர்ந்து 115 வந்திருக்கும் என்று பட்டறையில் காசியிடம் நகைச்சுவையாகச் சொன்னேன்.


இன்று யூனிகோட் வந்த பிறகு  மற்றவர்கள் எல்லோரும் அமைதியாக கூகிளில் தேடி, ஈ-கலப்பையைக் கொண்டு வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் இன்னும் சில பத்திரிகைகள் விடாப்பிடியாக பழைய ஃபாண்டையே உபயோகப்'படுத்தி'க் கொண்டிருக்கிறார்கள். பழைய அரசியல் 'லாபியிங்' பாதிப்பு தான் இதற்குக் காரணம். பத்திரிகைகளைக் குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை.


எனக்கு 13 வருடங்களுக்கு முன் தமிழ் அடித்த போது ஏற்பட்ட அதே த்ரில்லை, பட்டறையில் சில மாணவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பார்த்தேன். அட தமிழில் டைப் அடிக்க முடிகிறதே என்ற பூரிப்பு கண்களில் தெரிந்தது. உடனே என் பெயர், முகவரி, ஃபோன் நம்பர் எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டார்கள். "டவுட் இருந்தால் பெங்களூருக்கு ஃபோன் செய்கிறேன் சார்!" என்றார்கள்.


எனக்கு தோன்றியது இது தான் - பதிவர்கள் சிலர் ஒரு கல்லூரி, பள்ளி என்று சென்று இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று செயல் முறை விளக்கமாக காண்பிக்கலாம். இன்னும் ரீச் நன்றாக இருக்கும். அதே மாதிரி பெரிய நிறுவனங்களுக்கும் எடுத்துச் சென்றால் விதவிதமான களங்களில், தளங்களில், மற்றும் வேறுபட்ட தொழில்சார்ந்த பதிவர்கள் நமக்குக் கிடைப்பார்கள். இது முக்கியம் என்று தோன்றியது. 


பட்டறையில் பழைய நண்பர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கேட்ட கேள்விகள்..


"என்ன சார் புதுசா தாடி?"


"ரீசண்டா என்ன கோவில் போனீர்கள்?"


"ஏன் சார் இப்ப எல்லாம் முன்பு போல வேதாளம் வருவதில்லை?"


"...அப்புறம் நீங்க தான் இட்லிவடையா?"


- * - * -


ஆசிப் மீரான் பட்டறைக்கு வந்தது எனக்குத் தெரியாது, நான் அவரைப் பார்த்ததில்லை. ஆசிப் மீரானை சக வலைப்பதிவர் என்ற முறையில் தெரியும். ஆசிப் மீரான் அப்பா பிரபல கிரிக்கெட் வர்ணையாளர் அப்துல்ஜாபர் மகன். "இப்போது கவாஸ்கர் மட்டையைத் துக்கி அடிக்க, பந்து பவுண்டரி நோக்கிப் போகிறது, அங்கே மிக திறமையாகப் பந்தை நிறுத்துகிறார்..." என்ற பேச்சை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியா!. ஸ்கூல் படிக்கும் போது, சின்ன டிரான்சிஸ்டரை எடுத்துச் சென்று, ஒரு வகுப்பிற்கும் அடுத்த வகுப்பிற்கும் இடையே ஆசிரியர் வரும் இடைவேளையில் இந்த வர்ணனையைக் கேட்போம். அப்போது எல்லாம் இந்தியா ஜெயிக்கும்.


சமிபத்தில் ஆசிப் மீரான் அன்பான மனைவியை இழந்திருந்தார். ஏதோ நரம்புப் பிரச்சினை என்றும், ஒரு சிறு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சில மணி நேரத்தில் அவருக்கு தொடர்ந்து, மூன்று முறை ஸ்டிரோக் வந்து இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விபட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.


ஆசிப் மீரானின் இல்லத்திற்குச் சென்றேன். முதலில் இவரை எப்படி சந்திக்கப் போகிறோம், என்ன பேசபோகிறோம் என்று மிகவும் குழம்பிப் போனேன். போகும் போதே முதலில் என்ன பேசலாம் என்றே யோசித்துக் கொண்டிருந்தேன்.


நான் அவர் இல்லம் சென்ற சமயம் என்னை அன்பாக வரவேற்று நலம் விசாரித்தார். பொதுவாக எப்படி இருக்கீங்க என்று ஆரம்பித்து... பேசிக் கொண்டிருந்தோம். நான் போன சமயம் இரண்டு குழந்தைகள் (மகன் 7வது படிக்கிறான், மகள் 5வது படிக்கிறாள்)  டிவியில் Pogo பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இன்னும் அந்தக் குழந்தைகளுக்கு அம்மா இல்லாத பாதிப்பு முழுவதும் தெரியவில்லை.


இவ்வளவு நடந்த போதும், தன்னம்பிக்கையை இழக்கவில்லை ஆசிப். எப்படி இவர்களை அம்மா இல்லாமல் எந்த குறையும் இல்லாமல் வளர்ப்பது என்று என்னிடம் அவர் திட்டங்களைப் பற்றி பேசினார்.  நான் கொஞ்சம் அசந்து போனேன். இவ்வளவு சின்ன வயசில் என்ன ஒரு முதிர்ச்சி, தன்னபிக்கை. ஆசிப் மீரான் போன்ற அப்பா கிடைப்பதற்கு எந்த குழந்தையும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.


போகும் போது, வாசல் வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தார். 2001ல் வந்த அமீரகம் ஆண்டுவிழா மலருக்கு நான் அவருக்கு ஹரன்பிரசன்னா மூலம் அனுப்பிய லைன் டிராயிங்குக்கு நன்றி கூறினார். எனக்கு நிஜமாகவே கண்களில் கண்ணீர் வந்தது.


பின்சேர்க்கை:  மீண்டு(ம்) வருகிறேன் நண்பர்களே!! ஆசிப் மீரான் பதிவு.

Comments