Skip to main content

சுஜாதா பற்றி ஜெயமோகன்

சுஜாதா: மறைந்த முன்னோடி


ஒன்பதுமணி வாக்கில் மனுஷ்யபுத்திரனிடம் தொலைபேசியில் உரையாடினேன். கடுமையான மனச்சோர்வுடன்,”இப்பதான் ஆஸ்பத்திரியிலேருந்து வரேன். சுஜாதா ரொம்ப சிக்கலான நெலைமையிலே இருக்கார்” என்றார். ஏற்கனவே ஒருமாதம் முன்பு நுரையீரலில் நீர் கோர்த்து மருத்துவமனையில் தீவிர சிகிழ்ச்சைப்பிரிவில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வீடு திரும்பிவிட்டார் என்றார்கள். சென்னை சென்றால் போய் பார்த்துவிட்டுவரவேண்டுமென்ற ஆசைகூட எனக்கு இருந்தது. அதிர்ச்சியுடன் ”மறுபடியுமா?”என்றேன். இம்முறை தப்புவது கஷ்டம் என்றார் மனுஷ்ய புத்திரன். இப்போது செய்தி வந்திருக்கிறது. சுஜாதா மரணம் அடைந்திருக்கிறார்.



என் தலைமுறையைச்சேர்ந்தவர்கள் இலக்கியத்தில் நடை என்ற ஒன்றின் தனித்த வசீகரத்தை சுஜாதா மூலமே துல்லியமாக உணர்ந்திருப்பார்கள். அன்று சாண்டில்யன், பிவிஆர், அகிலன்,நா.பார்த்தசாரதி போல பல நட்சத்திர எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களெல்லாம் நிகழ்ச்சிகளாலும் கதைமாந்தர்களாலும்தான் வாசகர்களைக் கவர்ந்தார்கள். மொழியின் நுண்ணிய விளையாட்டுகளாலேயே முற்றிலும் மனதை கவர்ந்தவர் சுஜாதா.


என் பள்ளிநாட்களில் குமுதத்தில் தொடராக வந்த ‘அனிதா- இளம்மனைவி’ நாவலை மீண்டும் மீண்டும் வாசித்தது இபோதும் நினைவுக்கு வருகிறது. பாலு என்பவர் வரைந்த நீளமுகம் கொண்ட கணேஷ்! [அப்போது வசந்த் இல்லை]. அக்கதையின் சித்தரிப்புமுறை அளித்த வசீகரத்தை இப்போதுகூட அதே உணர்வுடன் மீட்ட முடிகிறது. அதேபோல என்னை அப்போது கவர்ந்த இன்னொரு படைப்பாளி அசோகமித்திரன். ‘நானும் ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்துஎடுத்த சினிமாபப்டம்’ இலாரியா’ போன்ற கதைகளை குமுதத்தில் பலமுறை வாசித்து அந்த நுண்ணிய எளிய மொழியின் புதுமையில் மயங்கினேன். ஆனால் பெயர் நினைவில் இல்லை. பத்துவருடம் கழித்து அசோகமித்திரனைப் படிக்கும்போது அக்கதைகளின் வரிகள் எல்லாமே அப்படியே நினைவில் இருப்பதை உணர்ந்தேன். அவரா இவர் என்று பிரமித்தேன்.


அனிதா இளம் மனைவியை பதினைந்து வருடம் கழித்து மீண்டும்படித்தபோதும் சுஜாதாவின் நடை அதே துள்ளலுடன் இருந்ததை உணர்ந்தேன். அதில் நான் கவனித்த நுட்பங்களை இளமையிலேயே ரசித்திருந்தேன். கணேஷ் முதன் முதலாக அனிதாவைச் சந்திக்கும் கணம். ஒரு விசித்திரமான மௌன இடைவெளியை சொல்லாலேயே உருவாக்கி ‘..இவ்வளவு அழகான பெண்ணா?’ என்ற வரி வழியாகவே வர்ணித்து முடித்திருந்தார். அதில் மோனிகா அறிமுகமாகும் காட்சியில் அவளுடைய குணச்சித்திரம் ஏழெட்டு வரிகளுக்குள்ளாகவே உருவாகி வரும் மாயம்.!


சுஜாதா அன்றும் இன்றும் என் பிரியத்துக்குரிய எழுத்தாளர். அவரது எழுத்துக்கு ஆழம் இல்லை என்று இன்று எனக்குத்தெரியும். அது முற்றிலும் மேற்தளத்திலேயே நிகழ்ந்துமுடியும் எழுத்து. அதன் இலக்கியத்தன்மை அதில் உள்ள அபாரமான சித்தரிப்புத்திறனால் மட்டுமே உருவாவது. மொழியால் புறவுலகை உருவாக்க முயலும் எந்தப் படைப்பாளியும் புறக்கணித்துவிட முடியாத முன்னோடி சுஜாதா. அவரிடமிருந்து நான் கற்றவை ஏராளம். ஆகவேதான் என் முதல் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் [திசைகளின் நடுவே] என் முன்னோடிகளாக அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோருடன் சுஜாதாவையும் சொல்லியிருந்தேன். சிற்றிதழ்ப்புனிதங்கள் கறாராகப் பேணப்பட்ட அன்று அது ஒரு விவாதமாக ஆகியது. என் ‘விசும்பு’ அறிவியல் புனைகதைகள் நூலை அவருக்குத்தான் சமர்ப்பணம்செய்திருந்தேன்.


சுஜாதாவின் முதல் கட்ட சாதனை அவரது நாடகங்களிலேயே. புகழ்பெற்ற அமெரிக்க யதார்த்த நாடகங்களுக்கு பலவகையிலும் நிகரானவை அவை. தமிழில் குறைவாகவே கவனிக்கப்பட்ட அவரது எழுத்து நாடகங்கள்தான். யதார்த்த நாடகங்களுக்கு உரையாடலே உயிர். சுஜாதா உரையாடல் விற்பன்னர். மேலும் நாடகங்களில் அவர் தனக்கு மிக அந்தரங்கமான ஒரு தளத்தையே எடுத்துக் கொள்கிறார். மத்தியதர வைணவ பிராமண குடும்பம்.பதன் தர்மசங்கடங்கள், தடுமாற்றங்கள்.


சுஜாதாவை தமிழின் மிகச்சிறந்த சிறுகதையாசிரியர்களின் வரிசையிலேயே நான் என்றும் வைத்திருக்கிறேன். அனைத்தையும் சுருக்கிச் சொல்லும் அவரது பாணியும் காட்சிசித்தரிப்பின் ஜாலமும் சிறுகதைக்கு சரியாகப்பொருந்திவருபவை. சிறுகதையின் செவ்வியல் வடிவம் சரியாக உருவாகி அவ்ந்த சிறுகதைகள் அவை. அவற்றை இரண்டாகப்பிரிக்கலாம். ‘குதிரை’ போன்று சிறந்த நகைச்சுவைப்படைப்புகள் ஒருவகை. ‘எல்டொராடோ’, ‘மாஞ்சு’ போல நடுத்தர வற்கத்தின் அன்றாடவாழ்க்கையின் ஒரு தருணத்தை முன்வைக்கும் துல்லியமான யதார்த்தக்கதைகள் இன்னொருவகை.


ஆனாலும் சுஜாதாவின் நடையே அவர் தமிழுக்கு அளித்த முதல்பெரும் கொடை. தமிழ் இலக்கியவரலாற்றில் அவரை நிலைநாட்டும் அம்சமும் அதுவே. சொல்லப்போனால் தமிழ் உரைநடையில் புதுமைப்பித்தனுக்குப் பின் நிகழ்ந்த முக்கிய்மான அடுத்த பாய்ச்சல் என்று அதையே சொல்லவேண்டும். அது ஒருவகை முன்னோடிவகைமை- ‘டிரென்ட் செட்டர்.


சுஜாதாவைப்பற்றிய இலக்கிய உரையாடல் அவரது நடையில் இருந்து தொடங்கபப்ட்டு நடையிலேயே முடித்துக்கொள்ளப்பட்டலாம். அதைப்பற்றி விரிவாகவே ஆராயவேஎன்டும்.அவரது சமகால படைப்பாளிகள் மட்டுமல்ல அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் கூட பழமை கொண்டபோதும் சுஜாதா புதியவராகவே இருந்தார். சுஜாதாவின் மூன்று அடிப்படை இயல்புகளே அதற்குக் காரணம். பிரமிப்பூட்டும் அவதானிப்புத்திறன் கொண்டவர் அவர். ஒன்று, புறவாழ்க்கையின் நுண்ணிய தகவல்களை அவரது புனைவுலகில் காண்பதுபோல தமிழில் அதிகம்பேரின் ஆக்கங்களில் காண முடியாது. உதாரணமாக ஒரு தொலைதூரப்பேருந்தில் லுங்கிகட்டிய ஓட்டுநர் அந்த சுதந்திரத்தால் கால்களை நன்றாக அகற்றிவைத்திருக்கிற காட்சி ஒரேவரியில் கடந்துசெல்கிறது ஒரு கதையில்.


இரண்டு, மொழியின் அனைத்து சாத்தியங்களையும் இயல்பாகத் தொட்டுவிடும் தேர்ச்சி அவருக்கு இருந்தது. மொழிமீது அவருக்கு இருந்த மோகமே அவரது பெரும் வலிமை. கடைசிக்காலக் கதைகளில் ஒன்றில் இன்றைய இளைஞர்களின் எஸ்.எம்.எஸ் மொழியை அப்படியே எழுதியிருந்தார். முழுக்கமுழுக்க விளம்பர தேய்வழக்குகளினாலான ஒரு கட்டுரையை ஒருமுறை எழுதியிருக்கிறார்.


மூன்றாவதாக அவரது கூரிய மூளைத்திறன். எழுதும் ஒவ்வொரு வரியிலும் அவரது ‘சவரநுனி’க் கூர்மை கொண்ட மூளையின் பங்களிப்பு இருக்கும். அதுவே அவரது பலவீனமும் கூட. அவருடைய படைப்புலகில் அவரை மீறி நிகழும் எதுவும் இல்லை. நெகிழ்ச்சிகள் கவித்துவ எழுச்சிகள் எதுவுமே இல்லை. ஆழ்மனம் நோக்கிய பயணமே இல்லை. ”எனக்கு எழுத்துமேலே இமோஷனல் ஈடுபாடு கெடையாது” என்று ஒருமுறை சொன்னார். ஆனால் அங்கதத்துக்கு அந்த மூளைத்திறன் பெரும்பலம்.


நான் நாலைந்துமுறையே அவரைச் சந்தித்திருக்கிறேன். பொதுவாக அதிகம் பேசாதவர். ஆனால் முசுடு அல்ல. பேசும்தருணம் வாய்த்தால் பேசிக் கோண்டே இருப்பார். வண்ணதாசன் மகளுக்கு திருமணம் நடந்தநாளில் மண்டபத்தில் அவர் என்னிடம் வைணவம் பற்றி விரிவாக பேசியதை நினைவுகூர்கிறேன்.1997 ல் விஷ்ணுபுரம் எழுதிய பின் அதை நவீன இலக்கியம் அறிந்த வைணவ அறிஞர் ஒருவரிடம் காட்டவேண்டுமென்று தோன்றியதும் அவரை அணுகினேன். அதைப்பற்றி நிறையவே பேசியிருக்கிறோம். திருவட்டாறு கோயிலுக்கு ஒருமுறை வர விரும்பியதாகச் சொன்னார். இலக்கிய முன்னோடிகள் வரிசையில் ஆதவன்,சுஜாதா, இந்திராபார்த்த சாரதி ஆகியோரைப்பற்றி எழுத திட்டமிட்டிருந்தேன்.


சுஜாதாவின் முகங்கள் பல. உள்வாங்கும் குணம் கொண்ட, அனுபவவாத அறிவியல் நோக்கு கொண்ட , தொழில்நுட்பக் காதலரான மனிதர். நவீன அறிவியல் மட்டுமே உலகை மீட்கும் என்ற எண்ணம் கொண்டவர். நான் அறிந்தவரை சாதிமத நோக்குகளுக்கு அப்பாற்பட்டவர், குடும்பமும் அப்படியே. அதற்கு அப்பால் அரங்கன் மீது மட்டும் உணர்வு ரீதியான, அவராலேயே விளக்க முடியாத, ஆழ்ந்த பிரேமை இருந்தது. அதற்கு அவருடைய இளமைப்பருவம், ஆழ்வார்களின் தமிழ் மீது அவருக்கிருந்த அடங்காத காதல் போன்றவை காரணம்


அவரைப்புரிந்துகொள்ள முக்கியமான ஒரு நிகழ்வு உதவும். திருச்சிபக்கம் பின்தங்கிய வணிக ஊர் ஒன்றில் போலியோவால் கால்களை இழந்து ,கல்விகற்பிக்கக்கூடப் பொருட்படுத்தப்படாமல், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, சுயநம்பிக்கையே இல்லாமல் தனக்குள் சுருண்டு வாழ்ந்த முஸ்லீம் இளைஞன் ஒருவனின் சில கவிதை வரிகள் வழியாக அவனைக் கண்டுபிடித்தார் அவர். இருண்ட உள்ளறைக்குள் நாள்கணக்கில் வாரக்கணக்கில் அவன் வாழ்ந்த அந்த உயரமான பிசுக்கு படிந்த பழங்காலக் கட்டிலை நான் கண்டிருக்கிறேன். அவன் அறியாத ஓர் உலகிலிருந்து சுஜாதா அவனை நோக்கி கையை நீட்டினார். அவனுக்கு தன்னம்பிக்கையை அளித்தார். அவன் வெளியுலகைப் பார்கக்ச்செய்தார். வெளியுலகம் அவனைப் பார்க்கும்படிச் செய்தார். படிப்படியாக அவனை ஒரு முக்கியமான கலாச்சாரச் சக்தியாக தமிழ்ச்சூழலில் நிலை நாட்டினார். மனுஷ்யபுத்திரன் சுஜாதா தமிழுக்கு அளித்த கொடை. அவரது எழுத்தில் அதிகம் தெரியாத அவரது அகம் எத்தகையது என்பதற்கான முக்கியமான ஆதாரம்.


முன்பொருமுறை எழுதிய கடிதத்தில் கீதைபற்றிய என் கேள்விக்குப்பதிலாக, விவாதத்தை முடிக்கும்முகமாக சுஜாதா ‘அறிதலின் எல்லைகளை உணர ஒரு வயது இருக்கிறது. இந்த புரோட்டீன் காலிஃப்ளவர் சலித்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. அப்போதுதான் அது அதை மீறி எதையாவது அறிய ஆரம்பிக்கிறது” என்று எழுதினார்.


எல்லையில் ஞானத்தன் ஞானமஃதே கொண்டு
எல்லா கருமங்களும் செய்து
எல்லையில் மாயனைக் கண்ணனைத்தாள்பற்றி
யானோர் துக்கமும் இலனே





சுஜாதாவுக்காக ஓர் இரவு


ஒரு மரணத்திற்கு எதிர்வினையாக நாம் குறைந்தபட்சம் வைக்கக் கூடியதென்ன? ஓர் இரவின் துயில் நீத்தலே. இன்றும் ஏராளமான பழங்குடிச் சமூகங்களில் அவ்வழக்கம் இருக்கிறது. இரவு நம்மைச்சூழ்ந்து அமைதியாக இருக்கையில், செயலழிந்த பிரபஞ்சம் ஒன்றை உணரும்போது, நாம் மரணத்தின் இருண்ட வெளியை மிக அந்தரங்கமாக அறிகிறோம். அது ஒருவரின் இழப்பு என்பதைத் தாண்டி மரணம் என்ற பிரபஞ்சநிகழ்வாக ஒருகணமேனும் நம்மை அடைகிறது.


இன்றிரவு முழுக்க விழித்திருந்தேன். படுத்தும், எழுந்தமர்ந்தும். சுஜாதாவின் எந்த நூலையும் படிக்கத்தோன்றவில்லை. அவை ஒருவகை கொண்டாட்டங்கள். இத்தகைய மனநிலைகளுடன் இயைவன அல்ல. இயல்பாகவே நாடி நாலாயிர திவ்யபிரபந்தத்தை படித்தேன்.


சுபமங்களாவின் நிகழ்ச்சி ஒன்றில் கோமல் சுவாமிநாதன் துணையுடன் சுஜாதாவை நான் முதலில் சந்திக்கும்போது என்னிடம் அவர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசித்ததுண்டா என்றார். அத்தகைய நூல்களை வாசித்ததுண்டு என எப்படிச் சாதாரணமாகச் சொல்ல முடியும் என்று கேட்டேன். வாசித்துக் கொண்டே இருக்கிறேன் என்றேன். அந்தப் பதில் சுஜாதாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லா மனநிலைகளிலும் அவ்வப்போது அதைப்பிரித்து எதையாவது படித்து சரியான வரிகள் கண்ணில்பட்டதும் மூடிவிட்டு அதைப்பற்றி எண்ண ஆரம்பிக்க வேண்டும் என்றார்.


கோமலுக்கு வைணவ இலக்கியங்களில் ஆழமான ஈடுபாடும் தொடர்ந்த வாசிப்பும் நல்ல சேகரிப்பும் இருந்தது என்பது பலர் அறியாத தகவல். மூவரும் அன்று அதிகமும் நம்மாழ்வார் பற்றியே பேசிக் கோண்டிருந்தோம். பிற்பாடு நான் விஷ்ணுபுரத்தில் நம்மாழ்வார் சாயலில் ஒரு கதாபாத்திரத்தை கேலிச்சித்திரமாக எழுதிவிட்டேன் என்று சுஜாதா மிகவும் மனம் வருந்தி அந்நாவலை முழுக்கப் படிக்க மறுத்துவிட்டார். நெடுநாட்களுக்குப் பின்னர் நம்மாழ்வாரை நான் தமிழின் மாபெரும் கவிஞர்களில் ஒருவராக கருதுகிறேன் என்று எழுதியிருந்ததை வாசித்துவிட்டு என்னிடம் தொலைபேசியில் பேசினார். [ கபிலர், ஔவையார், பாலை பாடிய பெருங்கடுங்கோ, இளங்கோ, திருவள்ளுவர், கம்பன், நம்மாழ்வார்]


”ஏன் அப்படி எழுதினீர்கள்” என்றார் சுஜாதா, ஆழ்ந்த வருத்ததுடன். ”அது அந்த நாவலின் இலக்கிய உத்தி மட்டும்தான் சார். அதில் ஒட்டுமொத்தமாகவே உயர்தத்துவம் மீதான ஒரு அங்கதம் அப்படி பல கோணங்களில் வெளிப்படுகிறது” என்றேன். சுஜாதாவால் இறுதிவரை அதை ஏற்க இயலவில்லை. ஆனாலும் மீண்டும் நம்மாழ்வார் பற்றி பேசினோம்.


”ஆண்டாளை விடவா?” என்றார் சுஜாதா. அதே கேள்வியை ஆண்டாளின் தீவிர ரசிகரான வேதசகாயகுமார் பலமுறை கேட்டிருக்கிறார். ஆண்டாளிடம் நெகிழ்ச்சியும், தன்னைமீறும்கவித்துவ வேகமும் இருக்கிறது. பெரியாழ்வாரிடம் நெகிழ்ச்சியின் உச்சநிலைகள் உள்ளன. ஆனால் பெருங்கவிஞன் என்பவன் ஆழ்ந்த அறிவுத்தளமும் கொண்டவன். அவன் தத்துவஞானியும் கூட. நம்மாழ்வாரின் கவிதைகளில் விரிந்த தத்துவநோக்கும், கல்வியும் சுத்தமான பித்துநிலையுடன் பிறிதிலாது முயங்குகின்றன. பறவைகள் பறப்பது அழகு. யானை பறக்குமென்றால் அதுவே அற்புதம்.


இன்றிரவெல்லாம் விட்டுவிட்டு நம்மாழ்வாரையே படித்துக் கொண்டிருந்தேன். மேலே எழுப்பி காற்றில் உலவ விடும் ஒரு வரியுடன் வீட்டுக்குள் உலவி டீ போட்டு குடித்து சற்று நேரம் படுத்து மீண்டும் நூலைப்பிரித்தேன். அரவிந்தர் கவிதையின் மொழிவெளிப்பாட்டை Poetic utterance - கவித்துவ உளறல் என்கிறார். கவிதையின் உச்சம் Supreme poetic utterance என்கிறார். அந்நிலையில் மொழி மொழியாக மட்டுமே நின்று பேருவகையை அளிக்கிறது. ஒரு சொல்லிணைவு அதற்கு அப்பால் சிந்தனை நகர முடியாமல் நிறுத்திவிடுகிறது. பலசமயம் உச்சகட்ட கவித்துவநிலைகள் பிரமிப்பு நெகிழ்வு ஏக்கம் போன்ற ஆதி உணர்ச்சிகளில் நேரடி வெளிப்பாடுகள் மட்டுமே. ஆகவே அவை வெறும் வர்ணனைகள் அல்லது கூச்சல்களாகவே சாதாரண வாசிப்புக்குத் தென்படுகின்றன. விளக்க முடியாத ஒருமொழிநுட்பமே அவற்றை என்றுமழியா கவிதையாகவும் ஆக்குகிறது.


ரத்தினங்கள் கூழாங்கற்களாக இடறும் ஒரு நிலவெளியில் விழிபிரமித்து நடப்பது போன்றது நம்மாழ்வாரின் கவிதை. இந்த இரவின் தனிமையில் வெளியே தென்னையோலைகள் மேல் கோடைமழையின் தூறல்ஒலி தவளைக்கூச்சலுடன் சேர்ந்து ஒலிக்கும்போது என் தமிழ் ஒரு மொழியென்ற நிலையையே இழந்து தூய ஆனந்தவெளியாக முன்னால் நிற்கிறது.


”அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகமர் சூழொளியன்…”[2410] ”அழகமர் சூழொளி” என்ற சொல்லிணைவைத்தாண்டிச் செல்ல இயலவில்லை. சச்சிதானந்தம் என்ற கலைச்சொல்லின் ஒரு தமிழ் வடிவம் என ஒருவகையில் சொல்லலாம். அழகும் சாரமும் ஆன ஆனந்த வெளியானவன். ஆனால் அழகு அமர் சூழ் ஒளி என்ற சொல்லிணைவு அது மட்டுமல்ல. அந்த சொல்லிணைவு அந்நாவில் அமர்ந்த தருணத்தை சென்றடையும் வரை நம்மை இட்டுச்செல்லும் பயணம் அது.


”துளிக்கின்ற வானிந்நிலம்”. [2223] வைணவர்களின் வழக்கமான வாசிப்பிலும் உரைமரபிலும் பக்தி மற்றும் வேதாந்தம் சார்ந்து வரும் பொருள்கோடல்களைத் தாண்டிச்சென்று மதம்சாராத பக்திசாராத தூய கவிதைவாசிப்பொன்றை நிகழ்த்தினால் சடகோபனின் கவிதையில் திறக்கும் வாசல்கள் பல. கவிதையில் ஒட்டுமொத்த பாடலின் பொதுப்பொருள்தளத்தைவிட்டு எடுத்துக்கூட நாம் சொல்லிணைவுகளை நம்முள் விரித்துக் கொள்ளலாம். துளிக்கின்ற வானமே இந்நிலம். வானின் ஒருதுளி. இதன் அனைத்து இழிவுகளுடனும் இது வானமே. அளிக்கின்ற மாயப்பிரான் பள்ளி கொள்ளும் விசும்பு.


கருமை என்ற பொருள்நிலையை ஒரு பேருருவகமாக ஆக்குகின்றன வைணவ இலக்கியங்கள். ஒரு கருத்துநிலையாக ஒரு பிரபஞ்சநிலையாக இறுதியில் ஒரு பிரபஞ்ச அனுபவமாக. ‘மைதோய் சோதி” [2283] கருமையடர்ந்த பேரொளி. கருமையே பேரொளியாக ஆனது. பேரொளி என்பதே கருமையின் ஒரு நிலைதானா? மீண்டும் மீண்டும் பலநூறு முறை இந்த முரண்களுக்குள் சென்று வருகின்றன ஆழ்வார் பாடல்கள்.


நம்மாழ்வாரின் பாடல்கள் நெகிழ்ச்சியின் எல்லைகளுக்குள் முழுமையாக வருவது தலைவி,செவிலித்தாய் பாவனைகளில் பாடப்பட்ட பதிகங்களில். தமிழின் மகத்தான காதல்பாடல்கள் பல இவற்றில்தான் உள்ளன. சங்ககாலம் தொடங்கி அறுபடாது வளர்ந்து வந்த தமிழ் அகமரபின் உச்சநிலைகள் என ஏராளமான பாடல்களைச் சொல்ல முடியும். மிக எளிமையாக வெளிப்படும் உணர்ச்சிகரம் அந்த நேரடித்தன்மையாலேயே கவிதைவாசகனை தோயவைத்துவிடுகிறது. ”நின் பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்தென் நெஞ்சமே” [2436]ஆவிதழுவுதல் என்ற சொல்லை பல்லாயிரம் முறை சொன்னாலும் இணையாகாத உருவகம்.


காமம் பக்தியாக உன்னதப்படுத்தப்பட்டிருப்பது[Sublimation] உலகமெங்கும் உள்ள பக்திப்பாடல்களில் காணப்படுகிறது. கவிதை எல்லாவற்றையுமே உன்னதப்படுத்தும் கலை என்ற நோக்கில் இக்கவிதைகளின் மதிப்பு மிக அதிகம். தமிழின் மிக்ச்சிறந்த காதல்வெளிப்பாடுகள் நம்மாழ்வாரின் கவிதைகளில் உள்ளன. அவை மானுடக்காதலென்னும் நிலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு காதல் என்ற தூயநிலையாக ஆக்கபப்ட்டவை. அவற்றை பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகளின் உன்னதமாக்கலுடன் ஒப்பிட்டு வாசிக்கும் வாசிப்பு பல புது அனுபவங்களைத் திறக்கக் கூடும்.’அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதா என்னும்’ [2449]காதல்வேகத்தை கவிதையின் வழியாகவே அறிய முடியும்.


பக்தியின் உச்சநிலையை புரிந்துகொள்ள இன்றைய வாசகனுக்கு இருக்கும் இடர்கள் பல. கவிதைகளின் வழியாக அங்கே சென்றுசேர ஒரு வழி உள்ளது. உலகமெங்கும் எல்லா கவிதைகளிலும் காணப்படும் ‘தன்னை இழந்து பெரிதொன்றில் கரைவதற்கான’ மனநிலையை ஒரே மைய உணர்வாக உருவகித்து அதன் ஒரு பகுதியாக பக்தியையும் எடுத்துக் கொள்வதே அந்த பாதை. அந்நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டு கற்பனாவாதக் கவிதைகளில் உள்ள இயற்கையும் ,இருபதாம் நூற்றாண்டு இருத்தலியல் கவிதைகளில் உள்ள காலமும் ஒன்றே. அதையே விண்ணளந்தோன் என்றும் அம்பலத்தாடியவன் என்றும் வானுறை பிதா என்றும் கவிஞர் சொல்கிறார்கள் என்று கொள்ளலாம்.


நம்மாழ்வார் கவிதைகளின் பக்திவேகம் இரு எல்லைகளைத் தொட்டு ஆடிக் கொண்டிருக்கிறது. அந்த முதல்முழுமைக்கும் தனக்குமான தொலைவை உணரும்போது வரும் ‘அக்கணமே அழிந்துமறையத்துடிக்கும்’ ஆவேசம் ஒருபுறம். அந்த முதல்முடிவிலா வெளியை தானறியும் தன்மையுடன் சொந்தமாக்கிக் கொண்டுள்ள பரவசம் மறுபக்கம். ”நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை” [2464] என்று பெருமாளை சொந்தமாக அருகில் வைத்திருக்கும் அந்த நிலையை ஊகித்து இரவின் தனிமையில் புன்னகைசெய்துகொண்டேன்.


இன்றிரவு முழுக்க நம்மாழ்வாரின் சொற்கள். நூற்றுக்கணக்கில். விடிந்து வெகுதொலைவில் பறவைகள் எழும் ஒலி. ”பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்!” புவனமுழுதையும் ஆளும் பறவைகள் சொல்கின்றன விடிந்துவிட்டதென்று. இந்த இரவு சுஜாதாவின் நினைவுக்கு.

Comments