Skip to main content

பயணங்கள், புத்தகங்கள்

ஜெர்மனியின்… செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்


இந்தப் பாடலின் ஆரம்பத்தில் கமல் இரண்டு கைகளிலும், ‘வா, வா,’ என சைகை காண்பிக்க, ஹீரோயின் “ரதி” ஓடி வந்து ‘பச்சக்’ என்று கமல் மீது ஒட்டிக்கொள்வார். திருமணம் ஆன புதிதில் இதே போல நானும் பாட, எனக்கு ஜெர்மனி மேல் காதல் என்று நினைத்து, அலுவலகத்தில் உடனே ஜெர்மனி போகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். தனியாகத் தான்.

“பிராஜக்ட் ஸ்கோப்பிங். இரண்டே வாரம் தான், திரும்ப வந்துவிடலாம்.” என்றார்கள். ஜெர்மனியில் என்ன கிடைக்கும், எப்படியெல்லாம் நான் கஷ்டப்பட்டேன், சாப்பாட்டுக்கு என்ன செய்தேன், அங்கே எடுத்துக்கொண்ட படங்கள் இவை என்றெல்லாம் எழுதி உங்களை கஷ்டப்படுத்த போவதில்லை, கவலைப்படாதீர்கள்.

கிளம்பும்போதுதான் ஃபிரேம் ரிலே (Frame Relay) பிராஜக்ட் என்ன என்று தெரிந்துகொண்டு வா என்று சொல்லி கையில் புத்தகத்தைத் திணித்து அனுப்பினார்கள். “என்னது, ஃபிரேம் ரிலேவா? எனக்கு அதப்பத்தி ஒன்னுமே தெரியாதே,” என்று அதிர்ந்து சொல்லி முடிக்கும்போது “லாஸ்ட் கால் ஃபார் பாசஞ்சர்..” என்று அறிவிப்பு வந்து விமானத்தில் ஏற்றிவிடப்பட்டேன். ஃபிளைட்டில் போகும்போது ஃபிரேம் ரிலே புத்தகத்தைத் திறக்க, வயிற்றைக் கலக்கியது.

ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் இறங்கியவுடன், வெளியே டாக்ஸிக்காரரிடம் நான் போக வேண்டிய முகவரியைக் காண்பித்தேன். ‘இன்று யார் முகத்தில் முழித்தேனோ,’ என்று ஜெர்மன் மொழியில் ஒரு பார்வை பார்த்துவிட்டு என்னை ஏற்றிக்கொண்டார். போகும் போதே நல்ல மழை, சாலை இரண்டு பக்கமும் பெரிய பெரிய மரங்கள். எதிர்ப்பக்கமோ பின்பக்கமோ வேறு ஒரு வாகனத்தையும் பார்க்கமுடியவில்லை. என் வழி தனிவழி என்று போய்க்கொண்டிருக்கும்போதே என்றாவது திகில் படம் எடுக்க வாய்ப்புக் கிடைத்தால், இது நல்ல லொக்கேஷனாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். ஒருவழியாக சில மணி நேரம் கழித்து என் அப்பார்ட்மெண்டில் என்னை இறக்கிவிட்டார்.

உள்ளே நுழைந்து சில நிமிடங்களில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

“ஹலோ இஸ் இட் தெய்சிகான்?” எதிர் முனையில் ஒரு பெண்ணின் குரல். (எவ்வளவு வயது என்று இனம்காண முடியவில்லை, என்றாலும் பெண்ணின் குரலைக் கேட்டதும் ஏன் வயதைப் பற்றி யோசிக்கிறோம் என்று எப்பவாவது யோசித்ததுண்டா ?)

“யெஸ்.”

“பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது? கொஞ்சம் நேரம் முன்புதான் வந்திருப்பீர்கள்; ரெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். அப்பார்ட்மென்ட் ஃபிரிட்ஜில் பழம், ஜூஸ், பால் எல்லாம் இருக்கிறது. வேறு ஏதாவது வேண்டும் என்றால் தயங்காமல் எனக்குக் கால் செய்யுங்கள் என் நம்பர்… “

“தேங்க்ஸ்.” என்றேன் ஆச்சரியத்துடன்.

அடுத்த நாள் காலை அலுவலகம் சென்றபோது வித்தியாசமாக இருந்தது.  வித்தியாசத்துக்குக் காரணம் இரண்டாம் மாடி ஏட்ரியமில் தோட்டம். பூச்செடி, ஆலமரம் என்று பெரிதாக வளர்த்திருந்தார்கள். கேன்டீன் அங்குதான் இருந்தது. இரண்டாம் மாடியில் தோட்டம் என்றால் முதல் மாடியில் எப்படி தண்ணீர் ஒழுகாமல் இருக்கிறது?  (நான் இருக்கும் வீட்டில் மேல் மாடியில் யாராவது அதிக நேரம் குளித்தால் கீழே பன்னீர் மாதிரி வெந்நீர் வரும்) ஏட்ரியம் மேலே திறந்த வெளி. மழை வந்தால் என்ன ஆகும்? இப்படிப் பல கேள்விகள் ஃபிரேம் ரிலேவுடன் சேர்ந்துக்கொண்டது.

அலுவலத்தில், என் ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பைன் மரங்கள். சில சமயம் மான்கள் ஓடுவதைப் பார்க்கலாம். அந்த இடத்தில் அந்த அலுவலகம் தான் கடைசிக் கட்டிடம். அதற்கு பிறகு. “End of Civilization” என்ற போர்ட் இருந்தாலும் இருந்திருக்கலாம்.

காலை சுமார் பதினொரு மணிக்கு என் அறைக்கு 45-50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து, “குட் மார்னிங்!” என்று எனக்குச் சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் என் மேஜைக்கு அடியில் இருந்த குப்பைத் தொட்டியில் இருக்கும் குப்பைகளை எடுத்து ஒரு பெரிய கூடையில் போட்டுக்கொண்டு, போகும்போது, “நேற்று நான் தான் ஃபோன் செய்தேன், நல்லா ரெஸ்ட் எடுத்தீர்களா?” என்று விசாரித்துவிட்டுச் சென்றார்.

697ffec8-ea66-4102-b2f5-69f8b264c053மதியம் லஞ்சில் மேலும் ஓர் அதிர்ச்சி. எதுவும் வெஜிட்டேரியன் இல்லை. சாம்பார் மாதிரி ஒரு பதார்த்தம் மட்டும் இருந்தது. “இது என்ன?” என்று ஆர்வமாகக் கேட்க, “முதலைக் கறி,” என்றார்கள். கஜேந்திர மோட்சம் நடந்த இடம் இதுவாகக் கூட இருக்கலாம். என்னுடன் கூட இருந்தவர் நான் முழிப்பதை பார்த்து “மே ஐ ஹெல்ப் யூ?” என என்று விசாரிக்க, “நான், வெஜிடேரியன்” என்றேன் அப்பாவியாக. அதனால் என்ன என்று சாம்பாரில் நீந்திக்கொண்டு இருந்த முதலையைப் பாத்திரத்தில் கரையோரம் தள்ளிவிட்டு சாம்பாரை மட்டும் எடுத்து என் தட்டில் போட வந்தார். ‘ஆதிமூலமே!’ என்று நடுங்கியேவிட்டேன். முதலை கடித்தால்கூட நான் இவ்வளாவு நடுங்கியிருக்க மாட்டேன். இல்லை வேண்டாம் என்று புறக்கணித்து, மற்ற பதார்த்தங்களைப் பார்த்த போது சாதம் மட்டும் தான் வெஜிட்டேரியன் என்று தெரிந்துகொண்டு வெறும் தட்டோடு வந்து உட்கார்ந்தேன். என்னுடைய சக ஊழியர் ஒருவர் என் தட்டில் ஒன்றும் இல்லாததை பார்த்து என்னை விசாரிக்க, “ஐ அம் அ வெஜிடேரியன், ஐ டேக் ஒன்லி ரைஸ் அண்ட் வெஜிடேபிள்ஸ்” என்றேன்.

அவர் உடனே எழுந்து ஒரு பெரிய கிண்ணம் நிறைய சாதத்தை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார்.  சினிமா ஹீரோயின் வெட்கத்தால் கால் விரல்களால் மண்ணில் கோலம் போடுவது போல ஸ்பூனால் மெதுவாகத் துளாவிய போது ஏதோ ஒரு பொருள் தென்பட்டது. ’அட, ஜெர்மானியர் சாதத்தில் முழுப் பூசணிக்காயா?!’ என்று ஆச்சரியத்துடன் அரிசியை விலக்கிப் பார்த்தபோது, பழுப்பு நிறத்தில் ஒரு முட்டை எட்டிப்பார்த்தது.

“வாத்து முட்டை தான், நல்லா இருக்கும்.” என்றார்.

காலை என் அறைக்கு வந்து குப்பையை எடுத்துக்கொண்டு போன அதே பெண்மணி ஏட்ரியமில் இருந்த தோட்டத்தில் காய்ந்த இலைகளைப் பொறுக்கி எடுத்து, குப்பையில் போட்டுக்கொண்டு இருந்தார். என்னைப் பார்த்துவிட்டு “என்ஜாய் யுவர் லஞ்ச்.” என்றார். பரிதாபமாகச் சிரித்த்துவைத்தேன்

இரண்டு வாரம் ஒரு மாதமாக நீண்டது. பிறகு ஒரு மாதம். இரண்டு மாதமாக ஆகியது. வந்த வேலை எதுவும் முடியவில்லை. அந்தச் சமயத்தில் என் இடது கை விரல் நகத்தில் ஏதோ இன்ஃபெக்ஷன் வந்து விரல் பெரிதாக வீங்கி விட்டது. இரண்டு நாள் அலுவலகம் போக முடியவில்லை. மூன்றாம் நாள் என்னையும் என் கையையும் வந்து பார்த்த அந்தப் பெண்மணி, மாலையில் காரை எடுத்துக்கொண்டு வந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர் என் கையைப் பார்த்தார்; அந்த பெண்மணியிடம் ஏதோ சொல்லிவிட்டு, சிறிதுநேரத்தில் சின்ன கத்தியை எடுத்து வீங்கிய இடத்தை வெட்டி எடுத்துவிட்டார். வெட்டும் போது அதைப் பார்க்க கூடாது என்று அந்தப் பெண்மணி என் கண்களைத் தன் கையால் மூடினார்.

ஒருவழியாக மூன்று மாதம் கழித்து, வந்த வேலையை முடித்துவிட்டு, கிளம்பும் முன் அந்த பெண்மணியைப் பார்த்து நன்றி சொல்லிவிட்டு வரலாம் என்று போனபோது, “உங்கள் குடும்பத்தை விட்டு இங்கே வந்து சில மாதங்கள் வேலை செய்ததற்கு மிக்க நன்றி.” என்றார்.  நானும் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினேன். “மை ஸ்மால் கிஃப்ட் ஃபார் யூ.” என்று ஒரு சின்ன கூடை நிறைய ஸ்ட்ராபெர்ரி கொடுத்தார்.

ஏர்போர்ட்டில் சில மணி நேரம் ஃபிளைட்டுக்குக் காத்திருந்த பொழுதில், அந்த ஸ்ட்ராபெர்ரி பொட்டலத்தைப் பிரித்து பார்த்தேன். அதில் “With best compliments from Mrs…. ” என்று எழுதியிருந்தது. Mr…. தான் அந்த கம்பெனியின் ஃபவுண்டர்!

-o00o-

போன வாரம் திருப்பதிக்கு ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். பயப்படாதீர்கள், உடனே ஆழ்வார் பாடல், திருப்பதி என்று எப்படி அது பெயர் பெற்றது, ஸ்தல புராணம் என்றெல்லாம் ஆரம்பித்து எழுதப்போவதில்லை.

திருமணம் கீழ்த்திருப்பதியில். திருமணம் முடிந்து எனக்கு இருந்த மூன்று மணி நேரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது, தொலைபேசி அழைப்பு வந்தது

“சார் நான் திருப்பதியில் இருக்கேன், பெங்களூருக்கு இன்று இரவு திரும்ப வந்துவிடுவேன், வந்ததும் பேசுகிறேன்.” என்றேன்.

“கோயிலுக்கு போனீர்களா? கூட்டம் எல்லாம் எப்படி?” என்று தொடர்ந்தார்

“நான் இருப்பது கீழ்த் திருப்பதி, மேலே போகலை!”

“திருப்பதி போயிட்டு கோயில் போகாம வரீங்க?” என்ற கேட்டார்.

திருப்பதி போய்விட்டு கோயிலுக்கு போகாமல் வருவதும், ஹோட்டலுக்கு போய் சாப்பிடாம வருவதும் ஒன்று தான் என்று புரிந்துக்கொண்டேன்.

இருக்கும் மூன்று மணி நேரத்தில் கீழ்த்திருப்பதியில் உள்ள கோவிந்தராஜப் பெருமாள் சன்னதிக்குச் சென்றேன். இங்கே பத்மாவதித் தாயார்தான் பிரசித்தம். தில்லை திருச் சித்ரக்கூட கோவிந்தராஜப் பெருமாள் சில காலம் இங்குவந்து இருந்து, பின்னால் தில்லைக்குச் சென்றுவிட, அவர் நினைவாக இந்தத் தலம் என்று சொல்லுகிறார்கள். சின்ன வயதில் சென்றிருக்கிறேன். அதனால் இது எனக்குப் புதிய கோயிலாகவே இருந்தது. பேருந்துக்கு இன்னும் 3 மணி நேரம் இருந்த காரணத்தால் 40 ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்றேன். அப்பொழுது தான் தெரிந்தது, எல்லோரும் பெருமாளைச் சீக்கிரம் சேவிக்க வேண்டும் என்று என்னைப் போலவே 40 ரூபாய் டிக்கெட் வாங்கி வந்துவிட்டார்கள். தர்ம தரிசனம், 10 ரூபாய் டிக்கெட் வரிசைகளில் யாருமே இல்லை; அதில் சென்றிருந்தால் பெருமாளைச் சீக்கிரம் சேவித்திருக்கலாம்.

சுமார் ஒரு மணி மணி நேரம் கழித்து பெருமாளைச் சேவித்துவிட்டு வெளியே வரும் போது ஒரு பெண் தோளில் ஜோல்னா பை மாதிரி ஒன்றில் சின்ன  குழந்தையுடன் போர்டபிள் தூளி என்று கூட சொல்லலாம். தசாவதாரம் மற்றும் அஷ்ட லெக்ஷ்மி பொம்மைகளை வாங்கிக்கொள்ளுங்கள் என்று என் பின்னாடியே ஓடி வந்தார்.

“ஐயா 100 ரூபாய்தான் வாங்கிக்கோங்க.”

“எனக்கு வேண்டாமா.”

“ஐயா 70 ரூபாய், புள்ள குட்டி இருக்குங்க!”

“இல்லமா எனக்கு வேண்டாம். வீட்டில இது மாதிரி நிறைய இருக்கு.”

“ஐயா 60 ரூபாயாவது தாங்க!”

“இல்லமா, என்னைத் தொந்தரவு செய்யாதே, வேண்டாம்னா போ.”

“ஐயா 40 ரூபாய் தாங்க. இதை எடுத்துக்கோங்க!”

எனக்கு எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று கையில் இருந்த 50 ரூபாயை அவளிடம் கொடுத்தேன். பொம்மையைக் கையில் கொடுத்து, “ஐயா அஷ்டலெக்ஷ்மி, வீட்டுல வெச்சிக்கொங்க.  நிறைய பணம் வரும்.” என்றாள். அவள் கொடுத்த மீதி பத்து ரூபாயை வேண்டாம் என்றேன். நன்றி சொல்லிவிட்டு அடுத்தவரிடம் வியாபாரம் செய்யக் குழந்தையுடன் ஓடிவிட்டாள்.

tirupathi_book_stall1


[பெரிதாக்க படத்தை அழுத்தவும்]

பேருந்து நிலையத்தில் கொஞ்சம் நேரம் கிடைக்க “ஸ்ப்தகிரி” என்ற திருப்பதி தேவஸ்தானம் வெளியிடும் புத்தகம்(விலை 5/=) வாங்கலாம் என்று பேருந்து நிலையத்தில் இருந்த கடையில் விசாரித்தேன். கடையில் தோரணம் போல இருந்த புத்தகங்களில் இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். அந்த புத்தகங்களைப் பார்த்தபோது சப்த நாடியும் அடங்கிவிட்டது.

-o00o-

திருப்பதியிலிருந்து பெங்களூர் வரும்வழியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ரகோத்தமனின் ராஜிவ் காந்தி பற்றிய புத்தகத்தை முழுதும் படித்து முடித்தேன். மலையிலிருந்து கீழே இறங்கும் குறையை அது போக்கியது. மலையிலிருந்து கீழே இறங்கும் வேகம் புத்தகத்தில் இருந்தது.

திருப்பதி சென்றுவிட்டு அடுத்த நாள் டெல்லிக்குச் சென்று திரும்பும் போது, ஏர்போர்ட்டில் ஒரு மணி நேரம் கிடைத்தது. ஏர்போர்ட்டில் இருந்த கடைகளில் பார்த்தபோது இரண்டு இட்லி விலை ரூ.89;  தோசை ரூ. 180. திருப்பதியில் அந்தப் பெண்மணி விற்ற அஷ்ட லெக்ஷ்மியும் அவளுடைய குழந்தையும் நினைவுக்கு வந்து, எதையும் சாப்பிடாமல், தோசை விலைக்கு மேல் பத்து ரூபாய் எக்ஸ்டரா கொடுத்து  “If God was a Banker” என்ற, ரவி சுப்பரமணியம் எழுதிய, புத்தகத்தை வாங்கினேன். கிட்டத்தட்ட முடித்துவிட்டேன்.

பயணத்தில் படிக்கும் புத்தகங்களைவிட பயணம் நமக்கு நிறைய சொல்லித் தருகிறது.

Comments