Skip to main content

பெருங்காயம் உருவான கதை

அப்பாவின் ரேடியோ” சிறுகதை பற்றி ஆமருவி தேவநாதன் தன் வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளார். அவருக்கு என் நன்றி.
கடைசியில் “இவற்றை எழுதக் காரணமான நிகழ்ச்சிகள் பற்றி திரு.தேசிகன் எழுதினால் இன்னமும் சுவைக்கும்.” என்று விண்ணப்பம் செய்துள்ளார்.

எழுதலாம். ஆனால் ரொம்ப போஸ்ட்மார்டம் செய்தால் சிறுகதை சுவைக்காது. சுஜாதாவுடன் பழகிய நாட்களில் அவர் எழுதும் சிறுகதைகளை பற்றி என்னிடம் விவரிப்பார். குறிப்பாக விகடனில் எழுதிய ஸ்ரீரங்கத்துக் கதைகளைப் பற்றியும் அதை ஒட்டி நடந்த உண்மையான சம்பவங்களை பற்றியும் என்னிடம் சொல்லியிருக்கிறார். யாருக்கும் கிடைக்காத ஒரு பெரிய பாக்கியமாக இதை நான் கருதுகிறேன்.

அவர் என்னிடம் அடிக்கடி சொல்லிகொடுத்த விஷயம் “details... details". அது இருந்தால் தான் ஒரு வித கதைகளுக்கு  நம்பகத்தன்மை வரும்.

முதல் விஷயமாக ”பெருங்காயம்” சிறுகதைப் பற்றி.
ஒரு முஸ்லீம் நண்பர் ஸ்ரீவைஷ்ணவர்களை காட்டிலும் பிரபந்தங்களை அழகாக ஒப்பித்தார் என்ற ஒற்றை வரியில் கதை இருப்பதாக தோன்றியது. ஆனால் முஸ்லீம், பிராமணர் பற்றி எழுதுவது கத்தியில் நடப்பது போல. எங்கள் தாத்தா கும்பகோணம் - பாபநாசம் பக்கம் மாளாபுரம் என்ற ஊரில் இருக்கும் அக்கிரகாரத்தில் வீடு. சில வருடங்களுக்கு முன் அதை விற்றுவிட்டாரகள். இந்த இரண்டு விஷங்களை வைத்து கதை எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

அதற்கு நான் தேர்ந்தெடுத்த ஊர் தேரெழுந்தூர். திருமங்கை ஆழ்வார் மங்களாசனம். அந்த ஊருக்கு நான் போனதில்லை. முதல் முறை அங்கே சென்று பெருமாளை செவித்திவிட்டு வந்தேன். அதற்கு பிறகு இரண்டு முறை அந்த ஊருக்கு ரயில், பஸ் என்று சென்று கதைக்காக சுற்றிப்பார்த்து குறிப்பு எடுத்தேன். இதற்கு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது!. பிறகு கதை எழுத ஆரம்பித்து,  முடிவு மட்டும் எழுதாமல் வைத்திருந்தேன். ஒரு நாள் கதையை முடித்துவிடலாம் என்று எழுத ஆரம்பித்த போது மனைவி ”அந்த கதை எழுதுவதை கொஞ்சம் நிறுத்திவிட்டு பெருங்காயம் வாங்கிக்கொண்டு வாங்க” என்றாள். சட்டென்று எனக்கு அந்த முடிவு கிடைத்தது.

கதை குங்குமத்தில் பிரசுரம் ஆனது.

குங்குமம் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு “சார் உங்க கதை நன்றாக இருக்கிறது ஆனால் சில பகுதிகளை எடிட் செய்ய வேண்டும் இல்லை என்றால் சில மத அமைப்புகளிலிருந்து பிரச்சனை வரலாம்” என்றார்கள். “நீங்களே எடிட் செய்துக்கொள்ளுங்கள்” என்றேன். குங்குமத்தில் மிக அழகாக அதை எடிட் செய்திருந்தார்கள். எப்படி எடிட் செய்திருக்கிறார்கள் என்பதும் எழுத்தாளருக்கு ஒரு படிப்பினை தான்.

- * -

ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியது ஒரு பெண்.
"சார் நீங்க தான் சுஜாதா தேசிகனா ?"
"ஆமாம்"
"உங்க பெருங்காயம் கதை குங்குமத்தில் படித்தேன்...உங்களுக்கு சொந்த ஊர் தேரெழுந்தூரா?"
"இல்லை.. திருச்சி"
"ஊரைப் பற்றி அப்படியே எழுதியிருக்கீங்களே... எங்களுக்கு அந்த ஊர் தான் இப்ப சென்னையில் இருக்கோம்... கதை ரொம்ப அருமை... எங்க கதை மாதிரியே இருந்தது"
"கதை வந்து மூன்று மாசத்துக்கு மேலே ஆச்சே இப்ப தான் படிச்சீங்களா ?"
"ஆமாங்க.. நாங்க தமிழ் பத்திரிகை எல்லாம் வாங்குவதில்லை"
"ஓ.. அப்ப எப்படி படிச்சீங்க... நெட்டிலா?"
"அது எல்லாம் தெரியாதுங்க... எங்க அக்கா படிச்சுட்டு எனக்கு அனுப்பினாங்க"
"உங்க அக்கா எங்கே இருக்காங்க"
"அவங்க பெங்களூரில் டாக்டர்.. அவங்க ஃபிரண்டு படித்துவிட்டு அவங்களை படிக்க சொல்லியிருக்காங்க... அப்பறம் அதை எனக்கு கூரியரில் அனுப்பினாங்க"
"என் போன் நம்பர் எப்படி கிடைத்தது"
"மூன்று நாளா பத்திரிக்கை ஆபீஸுக்கு ஃபோன் செய்து இப்ப தான் கிடைத்தது... "உங்களிடம் போன் செய்து கதை நல்லா இருக்கு என்று சொல்ல வேண்டும் போல இருந்தது"
"நன்றி" என்று சொல்வதற்குள் ஃபோனை வைத்துவிட்டார்.






Comments

  1. சார், நான் உங்களைக் கடந்த சில நாட்களாகப் படித்து வருகிறேன். உங்களது பழைய பதிவுகளில் படங்கள் எதுவும் வரவில்லை. கொஞ்சம் அந்தப் படங்களை மீண்டும் இணைத்து உதவுங்களேன், ப்ளீஸ்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ஒரு நாள் அதை எல்லாம் சரி செய்ய வேண்டும். பார்க்கலாம்.

      Delete
  2. ஒரு கதைக்கு மூன்று வருட உழைப்பு - அற்புதம் -Hats off Desikan

    ReplyDelete
  3. @Parthasarathy - http://bit.ly/desikan99 - This may help

    Regards
    Venkatramanan

    ReplyDelete

Post a Comment