Skip to main content

காக்கா

“ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” - திருமங்கை ஆழ்வார்

சில மாதங்களுக்கு முன் தி.நகரிலிரிந்து தாம்பரம் சானிடோரியத்துக்கு குடிபெயர்ந்தேன்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் அதிகம் இருக்கும் இடம் அதனால் சரவணபவன் கூட கிடையாது என்பது முதல் ஆச்சரியம். பழம்பெரும் தமிழ் எழுத்தாளர்களைவிட கொசு அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் ரிஸ்க் எடுக்காமல் முதல் வேலையாக நெட்லானை வெல்கரோ கொண்டு கதவை விட்டுவிட்டு ஜன்னல் பொன்ற சின்ன ஓட்டைகளை அடைக்க ஏற்பாடு செய்தேன்.

பக்கத்துவிட்டு முருங்கை மர குப்பை உள்ளே வராமலும், நான் தாளித்தால் கடுகு கூட ஜன்னல் வழியாக வெளியே போகாதபடி மிகவும் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். மன்னிக்கவும் வாழ்ந்தேன்.

பெங்களூரில் ஒரு வாரம் வாசம் முடித்துவிட்டு செய்துவிட்டு இன்று சென்னை திரும்பினேன்.

காலை ஐந்தரைக்கு வீட்டை திறந்தால் எல்லாம் அலங்கோலமாக இருந்தது.

ஷூராக் கீழே விழுந்து, நியூஸ் பேப்பர் கலைந்து, வீடு முழுக்க ஏதோ மஞ்சள் திரவம்... கூடவே வயிற்றை குமட்டிக்கொண்டு எலி செத்த நாற்றம்.

செத்த எலி எங்கே ? எங்கிருந்து வந்திருக்கும் என்று காலை ஆறு மணிக்கு ஆராயத் துவங்கினேன்.

முழுவதும் ஆராய்ந்த பின் பீரோ அடியில் ஏதோ கருப்பாக இருந்தது. இங்கிருந்து தான் நாற்றம் வருகிறது என்று டார்ச் அடித்து பார்த்தால் அது எலி இல்லை. ஒரு காக்கா! தலையில்லாமல்.

கொசு கூட வர முடியாத இடத்தில் எப்படி காக்கா என்று திரும்ப வீட்டை சோதித்தேன். சமையல் அறையின் ஒரு பக்கம் இருக்கும் ஜன்னல் வழியாக வெல்கரோவை தள்ளிக்கொண்டு ( ஏதோ துரத்த ) வந்திருக்கிறது. திரும்ப போக வழி தெரியாமல் வீடு முழுக்க அலைந்து செத்து போயிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன்.

காக்காவை கவரில் பார்சல் செய்து வெளியே இருக்கும் ஒரு குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, செண்ட், பினாயில், டெட்டால் என்று கைக்கு எது கிடைத்ததோ அதை எல்லாம் கலந்து வீட்டை சுத்தம் செய்த பின் கொஞ்சம் ’ஃபிரஷ் ஏர்’க்கு வெளியே சென்று விட்டு வரலாம் என்று வெளியே கிளம்பிய போது வீட்டை சுற்றி ஏகபப்ட்ட காகங்கள். என் தலையை சுற்றி என்று கூட சொல்லலாம். அதில் ஒரு காகம் நான் தான் ஏதோ தப்பு செய்துவிட்டேன் என்று நினைத்து என் தலையை கொத்த ஹிட்ச்காக்கின் "பேர்ட்ஸ்' படம் நினைவுக்கு வர நாற்றமே பரவாயில்லை என்று வீட்டுக்குள் ஓடி வந்துவிட்டேன்.

சரி ஒரு ரிலாக்சேஷனுக்கு பன்பலையை ஒலிக்கவிட்டால் அதில் ஏதோ ”கவிஞர் காக்கா கரையன்” என்று அசட்டுத்தனமான கவிதையை வைரமுத்துவின் மாடுலேஷனில்....பினாயில் நாற்றத்துடன்.

காக்காவை விரட்ட குடை தான் சரியான ஆயுதம் என்று வீட்டை விட்டு அலுவலகம் போகும் போது குடையுடன் சென்று காரில் ஏரிக்கொண்டேன். பக்கத்துவீட்டில் எதுக்கு குடை என்று பார்த்தார்கள்.

மாலை வீடு திரும்பிய போது மீண்டும் காகங்கள் என்னை வட்டமிட்டன.

எப்படி வெல்கரோவை தாண்டி உள்ளே வந்தது என்று யோசித்தேன். வெல்'crow' என்பதாலா ?

Comments